கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை பகுதியில் சுடுகாட்டுக்குச் செல்ல வழி விடாததால் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் புங்கனை பகுதியைச் சேர்ந்தவர் ஏட்டு (எ) ராமன் (68 ). இவர், உடல்நிலை சரியில்லாமல் இன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்பு தனது உடலை தன் சொந்த இடத்தில் தான் புதைக்க வேண்டும் என்று தனது மகன்களிடன் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இதனால் அவரின் உடலை எடுத்துக்கொண்டு மற்றொரு பிரிவினர் குடியிருக்கும் பகுதி வழியாக சென்றனர். அதற்கு மற்றொரு தரப்பினர் அவ்வழியாக உடலை எடுத்துச்செல்ல அனுமதி தராமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராமனின் உறவினர் மற்றும் புங்கனை ஊர்பொதுமக்கள் சடலத்தை சாலையிலே வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர், ஊத்தங்கரை வட்டாட்சியர் தெய்வநாயகி காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இறந்துபோன ராமனின் சடலத்தை அவருக்கு சொந்தமான மற்றொரு இடத்தில் அடக்கம் செய்தனர்.