ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பண்ணாரி சோதனைச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம்-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில், வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இன்று முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், தடையை நீக்க வலியுறுத்தியும் மலைவாழ் மக்கள், விவசாயிகள், வணிகர்கள் என 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பண்ணாரி சோதனைச் சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, 1,455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுத்தை, யானை, மான்கள் உள்பட 155 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.