தமிழ்நாடு

சொந்த ஊரில் வசந்தகுமார் எம்பியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி !

jagadeesh

மறைந்த ‌தொழிலதிபரும் காங்கிரஸ் எம்.பி.யுமான வசந்தகுமாரின் உடல், அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுகிலும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, வசந்த் அன் கோ நிறுவன ஊழியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, வசந்தகுமாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அவரது உடல் குடும்பத்தினரின் விருப்பப்படி, சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டது. செல்லும் வழியில் காமராஜர் அரங்க வளாகத்தில், வசந்தகுமாரின் உடலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திருநாவுக்கரசர் எம்பி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வழிநெடுகிலும் அவரது உடலுக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். நள்ளிரவு 12 ‌மணியளவில் வசந்தகுமார் உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. அங்குள்ள வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா மற்றும் கட்சியினர், பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பின்னர், வசந்தகுமாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.