தமிழ்நாடு

இரவில் உள்ளாடைகளோடு பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘மர்ம நபர்’ : போரூர் அருகே பரபரப்பு

webteam

போரூர் அருகே நள்ளிரவு நேரங்களில் உள்ளாடைகளுடன் திரியும் மர்ம நபரால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

சென்னை போரூர், சமயபுரம் 5வது தெருவில் உள்ள குடியிருப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராவை யாரோ இரவில் திருப்பி வைத்திருப்பது காலையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்ச்சியாக சில நாட்கள் நடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்துள்ளனர். காட்சிகளை கண்ட பின்னர் அதிர்ச்சியுடன் அவர்கள் அச்சமும் அடைந்துள்ளனர்.

அந்த காட்சிகளில், முகத்தை மறைத்தபடி ஜட்டி மற்றும் பனியன் அணிந்து கொண்டு வீட்டின் காம்பவுண்ட் சுவரை எகிறி குதிக்கும் மர்ம நபர், கையில் ஒரு டார்ச் லைட்டை வைத்துக்கொண்டு வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என நோட்டமிடுகிறார். அவர் பின்பகுதியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி கையில் நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொண்டு இருக்கிறார். தனது முகம் சிசிடிவி கேமராவில் பதிவாகக்கூடாது என்பதற்காக அவர் சிசிடிவி கேமராக்களை,மேல்நோக்கி பார்க்கும்படி திருப்பி விடுகிறார். பின்னர் வீடுகளின் ஜன்னல் கதவைத் திறந்து வீட்டில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா என்றும் சோதனை செய்கிறார். 

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதி தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் நபரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.