தமிழ்நாடு

காரைத்திருடி தாறுமாறாக ஓட்டிய இளைஞர்: மடக்கிப்பிடித்து வெளுத்த மக்கள்

webteam

பள்ளிக்கரணையில் கார் திருடியவரை பெருங்குளத்தூர் பகுதியில் மக்கள் மடக்கிப்பிடித்தனர்.

சென்னை பள்ளிகரணை பகுதியில் சிவா என்பவர் தனது கால்டாக்ஸியை ஓட்டி வந்தார். அவரை மடக்கிய வடமாநில இளைஞர் ஒருவர், திடீரென தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த காரை அங்கிருந்து திருடிக்கொண்டு சென்றுள்ளார். செல்லும்போது அவர் அங்கிருந்த சுவர்களில் மோதிக்கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு வண்டியை தாறுமாறாக ஓட்டிக்கொண்டு, வழி நெடுக விபத்துக்களை அந்த கார் திருடன் ஏற்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் பெருங்குளத்தூர் போக்குவரத்துப்பகுதியில், அந்தக் காரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

பிடித்தவுடன் உள்ளே இருந்த அந்த இளைஞருக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். அந்த நபர் இந்தியில் பேச, அவரை அருகில் இருந்து போக்குவரத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரை காவல்நிலையம் அழைத்துச்சென்ற காவலர்கள், விசாரித்ததில் ஓட்டிவந்த கார், திருடப்பட்டது என தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த இளைஞரின் பெயர் லியோனல் சிங் (29) என்பதும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர், காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமணை கொண்டு சென்றனர். மேலும் காரை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.