தமிழ்நாடு

மளிகைக்கடைக்குள் புகுந்து வெங்காயத்தை அள்ளிச் சென்ற திருடர்கள்

webteam

தாம்பரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் கல்லாவில் இருந்த ரூபாய் 2 ஆயிரம் பணம் மற்றும் வெங்காயத்தை எடுத்துச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. 

சென்னை தாம்பரம் அடுத்த அகரம் தென்பேருந்து நிலையம் அருகே மளிகை கடை வைத்திருப்பவர் பாலசந்திரன்(36). இவர் தனது கடையை நேற்று இரவு வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடை முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்து பார்த்தனர். அப்போது நேற்று நள்ளிரவில் 2 இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் வந்த காட்சி பதிவாகி இருந்தது. அதில் ஒருவர் மட்டும் இறங்கி கடைக்குள் சென்று கொள்ளையடித்து வந்த பின்பு அருகே நின்றிருந்த வாகனத்தில் ஏறி மொத்தமாக 4 பேர் தப்பி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. 

இதனைக் கைப்பற்றிய சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மளிகை கடைக்குள் புகுந்து சிகரெட் பிஸ்கட், அரிசி மூட்டையை எடுத்துச் சென்றது மட்டுமல்லாது வெங்காயத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்தச் செய்தி அப்பகுதி வாசிகளிடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.