blocked road pt desk
தமிழ்நாடு

ஈரோடு: மலையாளி பழங்குடியினருக்கு ST சான்றிதழ் வழங்கக் கோரி நடந்த போராட்டம் வாபஸ்!

கடம்பூர் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களுக்கு ST சான்றிதழ் வழங்கக் கோரி போராடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் உடனான பேச்சுவார்த்தைப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.

webteam

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும், மலையாளி பழங்குடியினருக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற்றுள்ளனர். ஆனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர், அந்தியூர் மலைப் பகுதியில் வாழும் மலையாளி இன மக்களுக்கு இதர வகுப்பினர் என வருவாய்த் துறை சான்றிதழ் வழங்கி வந்துள்ளனர்.

road blocked

சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டத்தில் மலையாளி மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்காதது ஏனென அம்மக்கள் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அரசு கண்டு கொள்ளாததால் கடந்த ஒரு வாரமாக ஆரம்ப கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பெற்றோருடன் இணைந்து பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிடக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்தா, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் ஆகியோர் பழங்குடியின மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று நள்ளிரவில் நடந்த பேச்சுவார்த்தையில் ஈரோடு மாவட்டத்திலும் எஸ்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என அம்மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

protest

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பேசி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த சான்றிதழ் கோரிக்கை ஏற்கெனவே அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் துரிதமாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.