தமிழ்நாடு

சவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை

சவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை

webteam

சிவகங்கை மாவட்டத்தில் சவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஜான் போஸ்கோ விவேகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கு சமுத்திர கண்மாய் 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதோடு கண்மாயின் கரைகளை உடைத்து சுமார் 20 அடி அளவுக்கு குழி தோண்டி வளமான கிராவல் மண்ணை எடுத்து விற்பனை செய்யும் வணிக நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். 

கண்மாய் கரைகளில் உடைக்கப்பட்டுள்ளதால், கண்மாயில் தேங்கும் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு கண்மாய் அருகிலேயே தனியார் பள்ளிக்கூடம் செயல்பட்டு வரும் சூழ்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் அடிக்கடி வந்து செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதோடு, பள்ளிக் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

எவ்விதமான முறையான அனுமதி இன்றி கண்மாயை சேதப்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, சிவகங்கை மாவட்டத்தில் சவுடு மண் குவாரி செயல்பட இடைக்கால தடை விதிக்கவும், சங்கு சமுத்திரம் கண்மாயில் குவாரியினால் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அதன் வரம்புக்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடுமண் குவாரிகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் இதுபோல குவாரிகள் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் சிவகங்கை மாவட்டத்தில் சவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.