தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 பணியிடங்களுக்கான தேர்விற்கு வரும் 25-ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்வர்கள் தமிழ் மாெழியில் நடத்தப்படும் தேர்வில் தகுதிப் பெறுவது கட்டாயம் எனவும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு 1021 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (அக்டோபர் 11ம் தேதி ) முதல் 25ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்படி 10-ம் வகுப்பு நிலையில் 50 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேரம் நடத்தப்படும் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும். அதனைத்தொடர்ந்து கம்ப்யூட்டர் மூலம் 2 மணி நேரம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வு ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படும். தமி்ழ் பாடத்தில் 40 சதவீதம் மதிப்பெண் பெறாதவர்கள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.
தேர்வுக்கட்டணமாக எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் 500 ம், மற்றவர்கள் 1000 செலுத்த வேண்டும். எம்பிபிஎஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளமாக 56100- 177500 வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி பணியாளர் தேர்வு நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.