தமிழ்நாடு

தனியார் பள்ளி விடுதியில் தங்கிப்படித்த மாணவி எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

சின்னசேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த 12-ஆம் வகுப்பு மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பில் பயின்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று அதிகாலை விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பள்ளி மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பள்ளி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து விடுதியில் தங்கி பயின்று வந்த மற்ற மாணவ மாணவிகளை அவர்களது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வருவதாக தனது தாயிடம் கூறிய மாணவி இன்று சடலமாக கிடப்பதாக கூறி மாணவியின் தாய் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.