conductor
conductor  pt
தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் பலத்த காயம்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

PT WEB

காஞ்சிபுரம் அடுத்த ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் கணபதி(28). இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை கோயம்பேட்டில் இருந்து திருத்தணி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் டிக்கெட் கொடுத்தபடி படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார்.

இதற்கிடையே, பூந்தமல்லி அருகே நசரப்பேட்டை பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, படியில் நின்றிருந்த கணபதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கணபதி விழுந்தது கூட தெரியாமல் சுமார் 300 மீட்டருக்கு ஓட்டுநர் பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார்.

விபத்து ஏற்பட்ட இடத்தின் அருகிலேயே காவல் நிலையம் இருந்ததால், அங்கிருந்த போலீஸார் கணபதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓடும் தனியார் பேருந்தில் படிக்கட்டில் நின்றபடி சென்ற நடத்துநர், படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்