சிறையில் கைதி உயிரிழப்பு Pt web
தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் கைதி உயிரிழப்பு.. காவல்துறை காரணமா? உறவினர்கள் போராட்டம்!!

நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதி திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 9-ஆம் தேதி தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, சபரி வர்மன் (35) என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரி வர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உறுதி செய்யப்படும்

இந்த சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சபரிவர்மனை போலீசார் அடித்துக் கொன்றதாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.