தமிழ்நாடு

கல்யாணராமனின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Veeramani

ட்விட்டரில் தொடர்ச்சியாக சர்ச்சை கருத்துகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜ செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் டவிட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டு வருவதாக சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடந்த 16 ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாணராமனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

அவருக்கு ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இரண்டு மாதங்களுக்கு முன் அரசியல் உள்நோக்கத்துடன் அளிக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனது பதிவுகளால் பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்படாத நிலையில், தன்னை அழைத்து விசாரிக்காமல் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்த போது, மத்திய குற்றப்பிரிவு தரப்பில் அஜரான அரசு வழக்கறிஞர் பதிலளிக்க கால அவகாசம் கோரியதை ஏற்று, அக்டோபர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.