தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: கேரள பூசாரிகளிடம் 19 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை

JustinDurai
கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த பூசாரிகளான சந்தோஷ்சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் 19 மணி நேரம் காவல்துறை தனிப்படையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2 ஆம் நாளாக நேற்றும் சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள்தான் கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கத் தேவையான கூடுதல் ஆள்களையும் பொருள்களையும் ஏற்பாடு செய்தவர்கள் என்று முந்தைய விசாரணை முடிவில் காவல் துறையினர் குறிப்பிட்டிருந்தனர். வழக்கில் 5 மற்றும் ஆறாவது நபர்களாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த சதீஷன், பிஜின்குட்டி ஆகியோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இவர்களிடம் 7 மணி நேரம் துருவித்துருவி பல்வேறு கேள்விகளை காவல் துறையினர் கேட்டனர்.
கொள்ளையடிக்கத் தூண்டியது யார், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பற்றியும் தனிப்படையினர் அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டு வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இன்றைய விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள தீபு, ஜியின் ஜாய் ஆகியோர் கொரோனா காரணமாக நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.