தமிழ்நாடு

வாட்ஸ்அப் குழு தொடங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த புரோகிதர்..!

webteam

சேலத்தில் 'அர்ச்சகர்' என்ற பெயரில் போலியா‌ன வாட்ஸ்அப் குழு தொடங்கி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றிய நபரை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

சேலம் காடையாம்பட்டியில் வசித்து வந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் புரோகிதர் பணி செய்து வந்தார். அவர் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கி அர்ச்சனை செய்வது குறித்து பாடம் நடத்தி அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என கூறியுள்ளார். இவற்றை நம்பி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.

ஆனால், மணிகண்டன் பல மாதங்களாக சான்றிதழ் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் நேரில் சென்று‌ கேட்ட போது மணிகண்டன் சான்றிதழ் தராமல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் ஏற்கனவே பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.