தமிழ்நாடு

தமிழ்நாடு வந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் - முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோர் வரவேற்பு

Sinekadhara

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு வருகைபுரிந்திருக்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு, பன்னீர்செல்வம், சபாநாயகர் அப்பாவு மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோரும், கனிமொழி உள்ளிட்ட சட்டமன்ற எம்.எல்.ஏக்களும் விமான நிலையம் சென்றனர்.

விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்லும் அவர், மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்ற இருக்கிறார்.

இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் நாளை காலை விமானத்தில் கோவை செல்கிறார்.