தமிழ்நாடு

மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு உற்சாக வரவேற்பு

webteam

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாட்டிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்துள்ளார். திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று காலை டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் முர்முவை தமிழ்நாடு முதல்வரின் சார்பில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வரவேற்றார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், டிஜிபி சைலேந்திரபாபு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உள்ளிட்டோரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.