தமிழ்நாடு

'கர்ப்பிணிகள் பாதிக்கப்படலாம்'-5ஜி செல்போன் டவர் அமைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள்எதிர்ப்பு

webteam

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

மேலும் குடியிருப்பு பகுதிக்குள் அதிக அலைகாற்றுடன் 5ஜி நெட்வொர்க் டவர் அமைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து செல்போன் டவர் அமைக்காமல் இருக்க அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் வந்தபோது அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், குடியிருப்பு வாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.