தமிழ்நாடு

நண்பன் ’இலியானா’ பாணியில் பிரசவம்.. இரட்டை கருவை சுமந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்!

JananiGovindhan

வாணியம்பாடியில் இரட்டை பிரவசத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழப்பு. செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சிகிச்சையளித்ததால் பெண் உயிரிழந்ததாக கணவர் குற்றச்சாட்டு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (20). கூலி தொழிலாளியான இவரது மனைவி சங்கரி (19). நிறைமாத கர்ப்பணியான இவர் இன்று அதிகாலை 4:30 மணியளவில் இரட்டை பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பிரசவ சிகிச்சையின் போது சிறிது நேரத்திலேயே சங்கிரி உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் சங்கரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடி மகப்பேறு மருத்துவர் இல்லாமல், பணியில் இருந்த செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததால் தங்கள் பெண் உயிரிழந்ததாக கூறி முற்றுகையிட்டனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் உயிரிழந்த கர்ப்பிணி சங்கரியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக யூடியூப் மூலம் வீடியோ பார்த்து பிரசவம் பார்ப்பதால் கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்று வரும் வேளையில், செவிலியர்களே ஃபோன் மூலம் பேசி பிரசவம் பார்த்திருப்பது சம்பவம் நடந்த பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

மேலும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் அதே வேளையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரும் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட கூடாது எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.