தமிழ்நாடு

மூதாட்டியின் புடவையில் பற்றிய தீ: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

JustinDurai
கோவிலில் சாமி கும்பிடும் போது மூதாட்டி புடவையில் தீப்பிடித்ததை துரிதமாக செயல்பட்டு அணைத்த போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை அகரம் சந்திப்பு அருகே போக்குவரத்து தலைமை காவலர் செந்தில் குமார் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அருகில் இருந்த கோவிலுக்கு 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாமி கும்பிட வந்தார். அப்போது திடீரென விளக்கிலிருந்து தீயானது மூதாட்டியின் சேலையில் பிடித்தது. இதில் சேலையில் தீயானது பரவியது. இதைக் கண்ட தலைமை காவலர் செந்தில் குமார் உடனடியாக ஓடிவந்து மூதாட்டியின் சேலையில் பிடித்த தீ உடலுக்கு பரவாத படி கைகளால் தீயை அணைத்தார். மூதாட்டி காயமின்றி தப்பினார். இதில் காவலர் செந்தில் குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
துரிதமாகவும் சாதுர்யமாகவும் செயல்பட்டு மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய தலைமை காவலர் செந்தில்குமாரை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தலைமை காவலர் செந்தில் குமார் தீயை அணைத்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.