துாத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வாதிட்டது.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்திருந்த வழக்கில், இன்று அந்நிறுவனம் சார்பில் 5ஆம் நாள் வாதம் வைக்கப்பட்டது. அதில், “நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரங்களையும் அரசு இதுவரை கொடுக்கவில்லை. தூத்துக்குடி பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் கடல்மட்டத்தின் அளவிலே இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையால் தான் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுவதை ஏற்க முடியாது. கடல் மட்டத்தில் இருக்கும் கிராமங்களில் நிலத்தடி நீரில் உப்பு நீர் புகுந்து விடுவதால் கிராமங்களின் நிலத்தடி நீர் மாசுடைகிறது.
1989, 1994 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் புவியியல் துறை நடத்திய ஆய்வறிகைகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வாறு இருக்க நிலத்தடி நீர் மாசுவுக்கு ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என எப்படி கருத முடியும். தூத்துக்குடியில் அதிக மாசு ஏற்படுத்திபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தான் மாசு அடைவதாக கூறுவது ஏற்க முடியாது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த வாதம் நாளை தொடரும்.