தமிழ்நாடு

ஓபிஎஸ் சொந்த தொகுதியில் இபிஎஸ்க்கு ஆதரவாக தொண்டர்கள் செய்த சம்பவம்

kaleelrahman

ஓபிஎஸ் சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருகின்ற 23-ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 15-ஆம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து பேசப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்பொழுது அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பிரச்னை சூடு பிடித்துள்ள நிலையில், இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில்லமரத்துப்பட்டி, சிலமலை உள்ளிட்ட கிராமங்களில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி-க்கு ஆதரவாக சில்லமரத்துப்பட்டி அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவருமான சரவணண், சிலமலை முன்னாள் அதிமுக கிளை செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்க தலைவருமான முத்து, போடி ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மு.பார்த்திபன் ஆகியோர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களில் 'அம்மா அவர்களின் மனதில் இடம் பிடித்தவரும் ஒன்றரை கோடி அதிமுகவினரின் உயிர் மூச்சாகிய எடப்பாடியார் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்று கழகத்தை வழி நடத்த வேண்டும் என வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.