தமிழ்நாடு

பள்ளி மாணவியின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை: காவல்துறை கட்டுப்பாட்டில் மருத்துவமனை

webteam

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் மறு உடற்கூராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்பில் சந்தேகம், இருப்பதாக குற்றம்சாட்டி சடலத்தை வாங்க மறுத்த பெற்றோர் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியின் சடலத்தை மூன்று பேர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், மாணவியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தங்களின் விருப்பப்படி மருத்துவக் குழுவினர் நியமிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதனை அடுத்து இன்று மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி மருத்துவர் ஜூலியான ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல ரமணன், விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி ஆகியோர் அடங்கிய குழுவினர் தடையவியல் நிபுணர் முன்னிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

இதனையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மாணவியின் பெற்றோர் தங்கள் விருப்பப்படி மருத்துவக் குழுவினரை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதனை அவசர வழக்காக விசாரிக்க கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.