தமிழ்நாடு

பூந்தமல்லி: ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஓட்டுனர் - என்ன காரணம்?

webteam

பூந்தமல்லியில் பணிக்கு வந்த டிரைவருக்கு தொடர்ந்து பஸ் தராமல் இழுத்தடிப்பு செய்ததால் விரக்தியடைந்த டிரைவர் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி அடுத்த புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38), இவர், பூந்தமல்லி அரசு பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார். இதையடுத்து பணிமனை மேலாளர் மற்றும் அதிகாரிகள் அவர் இயக்குவதற்கு முறையாக பேருந்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பணிமனை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது முறையாக பதில் சொல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டிற்குச் சென்றவர் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைத் தொடர்;ந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் பூந்தமல்லி பனிமனைக்குச் சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் அவர்களை கலைத்து விட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவகுமாரை அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் கமலக்கண்ணன் நேரில் சென்று நலம் விசாரித்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சிவகுமார், அம்மா தொழிற்சங்க பேரவையைச் சேர்ந்தவர் என்பதால் பாகுபாடு காட்டும் விதமாக வெள்ளை நிற போர்டு உள்ள அரசு பேருந்துகளை இயக்க கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.