உயிரிழந்த  ஸ்டீஃபன்
உயிரிழந்த ஸ்டீஃபன்  PT WEB
தமிழ்நாடு

சென்னை | கஞ்சா விற்பதில் தகராறு; இளைஞர் கொலை - உடலை சிதைக்க முயன்றபோது சிக்கிய நண்பர்கள்!

விமல் ராஜ்

செய்தியாளர் - ஆவடி நவீன்குமார்

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீஃபன் என்ற கருக்கா ஸ்டீஃபன்(22). இவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் அருகே அவர் நின்றுகொண்டிருந்த போது, சில மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்டீபனின் பெற்றோர் நசரத்பேட்டை போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஸ்டீபனை கடத்திச் சென்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

இதற்கிடையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே கடத்தப்பட்ட ஸ்டீஃபன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகவும், மர்ம நபர்கள் அவரது உடல் பாகங்களை வெட்ட முயற்சி செய்து வருவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஈசாக், விக்னேஷ் ஆகிய இருவரை மடக்கிப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஸ்டீஃபன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சா விற்பனை செய்வதில், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதில், ஈசாக் தரப்பினர் கஞ்சா விற்பனை செய்வதை, ஸ்டீஃபன் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஈசாக், ஸ்டீஃபனை கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஸ்டீஃபன்

இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.