கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள் ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், கன்னியாக்குமரி தொகுதியில் கடந்து முறை வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறையும் களமிறக்கப்பட்டார். ஆனால் தற்போது அவர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அவரை எதிர்த்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆக உள்ள வசந்த குமார் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ளார். கடந்த தேர்தலிலும் கூட முதலிடத்தை பொன் ராதாகிருஷ்ணனும், இரண்டாம் இடத்தை காங்கிரசை சேர்ந்த வசந்த குமாரும் பெற்றனர். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனை விட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வசந்தகுமார் தோல்வி அடைந்தார்.
வசந்த குமார் 38, 130 வாக்குகளும் பொன்.ராதாகிருஷ்ணன் 14,487 வாக்குகளும் பெற்றுள்ளனர். 23,643 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பின் தங்கி உள்ளார். நாம் தமிழர் கட்சி 645 வாக்குகளும் அமமுக 430 வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் 269 வாக்குகளும் பெற்றுள்ளது.