தமிழ்நாடு

”பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல்” - சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக மனு

kaleelrahman

பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் நடைபெற்றதாக சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சுமார் 1,297 கோடி செலவில் 2.15 கோடி பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 21 மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், பல ரேஷன் கடைகளில் குறைந்த அளவிலான பொருட்களே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தரம் குறைந்த மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்லி மற்றும் ஊசி போன்ற அபாயகரமான பொருட்கள் இருந்தது குறித்தும், பல பாக்கெட்களில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது குறித்தும் புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கரும்பு கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக கொடுக்காமல், 50 சதவீத தொகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைகேட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநில அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாகவும், காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் வருவதால் இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். மேற்கொண்டு பொங்கல் பரிசு வழங்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.