பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், சற்று நேரத்திலேயே முடிவடைந்தது.
2019ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜனவரி 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்றே தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முந்தய தினம் போகிப்பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை வருவதால் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சற்று நேரத்திலேயே முடிந்தது.
குறிப்பாக சென்னையிலிருந்து முக்கிய வழித்தடங்களான கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்திற்குமான ரயில் டிக்கெட் முன்பதிவு முடிவடைந்து காத்திருப்பு பட்டியலுக்குச் சென்றது. ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், 13ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுதினமும் நடைபெறும்.