தமிழ்நாடு

போராட வேண்டிய களம் அலங்காநல்லூர் அல்ல டெல்லி.... பொன். ராதாகிருஷ்ணன்

webteam

ஜல்லிக்கட்டு களத்தை தமிழக அரசியல் கட்சிகள் போராட்ட களமாக மாற்றி வருவதாகவும், போராடவேண்டிய களம் அலங்காநல்லூர் அல்ல டெல்லி தான் எனவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தடையை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்‌‌க வலியுறுத்தி ம‌துரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் ‌முன்பாக திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக கூட்டணியில் இருந்த அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் மக்களை ஏமாற்றுவதற்காக பல அரசியில் கட்சிகள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை போராட்ட களமாக மாற்றி வருவதாக குறிப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், போராட வேண்டிய களம் டெல்லிதானே தவிர அலங்காநல்லூர் அல்ல என்றும் தெரிவித்தார். திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொள்ளும் தலைவர்கள் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.