தமிழ்நாடு

போளூர் : சிவலிங்கம் மீது படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு.! பரவசமடைந்த பக்தர்கள்!

webteam

போளூர் அடுத்த செங்குணம் கிராமத்தில் நல்ல பாம்பு ஒன்று சிவன் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் மீது ஏறி படம் எடுத்து ஆடிய சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் பக்தர்கள் பரவசத்துடன் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் போ அடுத்த செங்குணம் கிராமத்தில் சிவாலயம் உள்ளது. இந்த சிவன் ஆலயத்தில் பொது மக்கள் காலை மாலை என இரு வேலைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மாலை சிறப்பு பூஜை செய்ய பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று சிவனை வணங்கிய போது, சிவலிங்கத்தின் மீது நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடிக் கொண்டே இருந்துள்ளது.

மேலும் சிவலிங்கத்தின் மீது இருந்த நல்ல பாம்பு பக்தர்களை பார்த்தபடி அமைதியாக இருந்ததால், பக்தர்கள் அனைவரும் நாகேஸ்வரா ! நாகேஸ்வரா ! என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு அனைவரும் வணங்கினர்.

பின்னர் சிறிது நேரத்தில் படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்த நல்ல பாம்பு திடீரென காணாமல் சென்று விட்டது. இதனால் பக்தர்கள் தங்களுடைய செல்போனில் சிவலிங்கம் மீது படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பை வீடியோ மற்றும் போட்டோக்கள் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் போளூரில் சிவலிங்கம் மீது நல்ல பாம்பு படம் எடுத்து ஆடிய காணொளி காட்சி வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ் புக்கில் வைரலாகி வலம் வருகிறது.