தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு - திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை

webteam

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர். 

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச வீடியோவாக ஒரு கும்பல் பதிவு செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் அரசியல் கட்சியினரும், மாணவர்களும் குற்றவாளிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்த வழக்கை பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர். 

இதனையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பாலியல் கொடூர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில், சிபிசிஐடி‌ டிஐஜி ஸ்ரீதர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சின்னியம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் ஏற்கனவே காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ள நிலையில், இன்று சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.