தமிழ்நாடு

‘பாலியல் கொடூரம் நடந்தது திருநாவுக்கரசு வீட்டில்தான்’ - உறுதி செய்த ஆதாரங்கள்

webteam

பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு வீட்டில் தான் என்பது ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது.

இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச படமெடுத்ததாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்ட நால்வர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு ஒன்றில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்படும் வீடியோ வெளியானதால் இப்பிரச்னையின் தீவிரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. அந்த பெண்கள் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்ட இடம், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசுவுக்கு சொந்தமான சின்னப்பம்பாளையத்தில் உள்ள வீடு என்பது தெரியவந்துள்ளது. 

வீடியோ காட்சியில் உள்ள ஃபேன், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள், மஞ்சள் நிற மூங்கில் இருக்கை, வெளியே அமரும் இடத்தில் போடப்பட்டிருந்த டைல்ஸ், அறையின் நுழைவு வாயிலில் உள்ள இரும்புத்தூண் ஆகியவை, திருநாவுக்கரசுவின் வீட்டில் உள்ள அதே பொருட்களுடன் ஒத்துப்போகிறது. இதனடிப்படையில், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டது அங்கு தான் என்பது உறுதியாகிறது. 

இதனிடையே அந்த வீட்டில், காவல்துறை மற்றும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள காந்தி நகரில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் மாலை 4.30 மணி முதல், சிபிசிஐடி எஸ்.பி. நிஷா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டில் உள்ள திருநாவுக்கரசின் பெற்றோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.