மருத்துவர்களுடன் இளைஞர் வடிவேல்
மருத்துவர்களுடன் இளைஞர் வடிவேல் PT
தமிழ்நாடு

இயந்திர விபத்தில் கை விரல்களை இழந்த இளைஞர் - கால் விரலை பொருத்தி தனியார் மருத்துவமனை அசத்தல்!

PT WEB

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் என்ற 19 வயது இளைஞர், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நூற்பாலையில் பணியாற்றும்போது இயந்திர விபத்தில் சிக்கியுள்ளார். இதில், அவரது இடது கையிலிருந்து மூன்று விரல்கள் துண்டாகி உள்ளது. விரல்கள் இழந்து சோகத்தில் இருந்த அந்த இளைஞர், பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். விரல்கள் இழந்த அந்த இளைஞருக்கு நல்ல முறையில் உள்ள கால் விரலை எடுத்து பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

கௌசிக்குமார், மருத்துவர்

அதற்காக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதில் இளைஞரின் வலது காலில் உள்ள இரண்டாவது விரலை எடுத்து, கையில் இழந்த கட்டை விரலுக்கு பதிலாக கால் விரலை பொருத்தி சவாலான அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது பத்து நாட்களுக்குப் பிறகு கையில் பொருத்தப்பட்ட கால்விரல் நல்ல ரத்த ஓட்டத்தோடு ஆரம்ப கட்ட அசைவுகளோடு, நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.

கோவை, சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள மருத்துவமனையில் மட்டுமே இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருவதாகவும், பொள்ளாச்சி போன்ற சிறு நகரங்களில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் இதுவரை நடந்ததில்லை என்றும், பொள்ளாச்சியில் முதல் முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.