தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.. மாறி மாறி குற்றம்சாட்டும் அரசியல் கட்சிகள்..!

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்.. மாறி மாறி குற்றம்சாட்டும் அரசியல் கட்சிகள்..!

Rasus

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக திமுகவும் அதிமுகவும் ஒன்றன் மீதொன்று மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளும் தரப்பு பகீரத முயற்சிகளை செய்வதாக புகார் கூறியுள்ளார். நடந்தேறிய கொடுமைகளில் ஒருதுளி மட்டுமே வெளிவந்திருப்பதாக தெவிரித்துள்ள ஸ்டாலின், காவல்துறை போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

வக்கிர கும்பலுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தலைமையில் இன்று போராட்டம் நடத்தவுள்ளது திமுக. அதன் கூட்டணிக் கட்சியான வி.சி.க.வும் 14-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவுத்துள்ளது.

திமுகவின் செயலுக்கு அதிமுக எதிர்வினை ஆற்றாமல் இருக்குமா? இந்த விவகாரத்தில் தன்னைப்பற்றி தவறான செய்திகளை திமுக பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ.வும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன். தன்னைப்பற்றி அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி.யிடம் புகாரும் அவர் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜ் என்பவரை கட்சியிலிருந்து அதிமுக நீக்கியுள்ளது. கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் களங்கும் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நாகராஜ் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்காமல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க கட்சிகள் துணை நிற்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.