எ.வ வேலு pt web
தமிழ்நாடு

"பழிவாங்கலின் உச்சமே இந்த சோதனை; நிரபராதி என்பதை நிரூபிப்பேன்" - எ.வ. வேலு

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் நிலையில், பழிவாங்கலின் உச்சமே இந்த சோதனை எனவும் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் எனவும் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

Premkumar S

2021 முதல் 2026 வரையில் திமுக ஆட்சிக் காலக்கட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் எ.வ. வேலு. அப்போது, கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் இந்த நிறுவனத்துக்கு ரூபாய் 3.23 கோடி நிதி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரரிடம் இருந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு, அரசு பொதுப்பணத்தை முறைகேடு செய்ததாகவும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் 9 அரசு அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

​இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது கூட்டுச்சதி, பொதுப்பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகங்கள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் இடங்கள் என மொத்தம் 20 இடங்களில் காலையில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வரை பொறியியல் கல்லூரியில் இருந்து சொத்து மற்றும் வங்கி தொடர்பான 13 ஆவணங்களும், கணக்கில் வராத 40 லட்சம் பணமும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தசூழலில்தான், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு மத்தியில் தற்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், "புதிதாக அமைக்கப்பட்ட அரசு செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் தெரிவித்தேன். அன்றைக்கு நான் சட்டப்பேரவையில் கொறடா என்கின்ற நோக்கில் கேட்ட கேள்வியை தான் இந்த தவெக அரசு மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்கக் கூடிய ஒரு நோக்கமாக லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவி சோதனையை மேற்கொண்டுள்ளது. இது போன்ற செயல்களில் தமிழக வெற்றிக்கழக அரசு ஈடுபட்டால் நாங்கள் பயந்து விடுவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் இது போன்ற உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் ஒரு பொழுதும் பயப்பட மாட்டோம்.

இந்த சோதனை தொடர்பாக நீதிமன்றத்தை தற்போது நாடி உள்ளோம். கண்டிப்பாக நீதிமன்றத்தில் நான் நிரபராதி என நிரூபித்து காட்டுவேன். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 40 லட்சம் பறிமுதல் செய்தது என்பது முழுக்க முழுக்கமான ஒரு பொய். நாங்கள் மக்களுக்காக பாடுபட்டவர்கள் இந்த சோதனை முழுக்க முழுக்க அதிகாரத்தின் உச்சம்" எனத் தெரிவித்துள்ளார்.