அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவருடன், அமைச்சர்கள், எம்பிக்கள், எம் எல் ஏக்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள தவெக தலைவர் விஜய், “ நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம். “ என்று தெரிவித்துள்ளார்.