தமிழ்நாடு

பண மதிப்பிழப்பைக் கண்டித்து கறுப்பாக மாறிய புரோபைல் படங்கள்..!

Rasus

பண மதிப்பிழப்பைக் கண்டித்து மு.க.ஸ்டாலின், குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் புரோபைல் படத்தை கறுப்பாக மாற்றியுள்ளனர்.

இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட இந்நாளை காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் கறுப்பு தினமாக அனுசரிக்கின்றன.

அதன்படி திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள புரோபைல் படத்தை கறுப்பாக மாற்றியுள்ளார். அதனைப்போல காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தின் புரோபைல் படத்தை கறுப்பாக மாற்றியிருக்கிறார். இவர்கள் மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பலரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்தப் பலனும் இல்லை. கஷ்டம் மட்டுமே மிஞ்சியது எனக்கூறி தங்களது ஃபேஸ்புக் பக்கத்தின் புரோபைல் படத்தை கறுப்பாக மாற்றியிருக்கின்றனர். மேலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களும் தங்களது டி.பி.பை கறுப்பாக மாற்றி பணமதிப்பிழப்பு தாக்கத்தின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.