தமிழ்நாடு

வடிவேலு தாயார் மறைவு.. நேரில் ஆறுதல் கூறிய மு.க.அழகிரி - அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

PT

தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் மூர்த்தி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் வடிவேலுவின் தாயாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமாக தலைவர் வாசன், பாமகவின் ஜி.கே.மணி மற்றும் திரைப்பிரபலங்கள் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தனர்.

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு மதுரையில் உடல்நல குறைவால் காலமானார். 87 வயதான சரோஜினி உடல்நல குறைவு காரணமாக 4 நாட்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் காலமானார். இவருக்கு வடிவேலுவுடன் சேர்த்து 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மொத்தம் என 7 பிள்ளைகள். இவரது மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், பாமகவின் ஜி.கே.மணி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலர் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை விரகனூர் பகுதியில் உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்ட நிலையில், மதியம் 3 மணி அளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பி. மூர்த்தி நேரில் வந்து மலர் மாலை வைத்து மரியாதை செய்து வடிவேலுக்கு ஆறுதல் கூறினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் போனில் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் நேரில் வந்து மரியாதை செலுத்தி உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

இதற்கு முன்பாக மு.க.அழகிரி வடிவேலு தோள்மீது கை போட்டவாறே அழைத்துச்சென்று ஆறுதல் கூறினார். அதேபோல் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் நேரில் வந்து தனது ஆறுதலை கூறினர்.