தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் இன்று நடைபெற உள்ளன.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட ஆயிரத்து 652 இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சொட்டு மருந்து வழங்க ஆயிரம் நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.
இந்தாண்டில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர் தவறாமல் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.