police summon
police summon pt desk
தமிழ்நாடு

மத்திய அரசு நிறுவனம் பெயரில் மோசடி: நடிகை நமீதாவின் கணவர் உட்பட இருவருக்கு காவல்துறை சம்மன்

webteam

சேலத்தில் கடந்த 30 ஆம் தேதி மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்நிறுவனத்தின் தேசிய தலைவர் முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் எம்எஸ்எம்இ அமைப்பின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்த நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில துணைத்தலைவர் மஞ்சுநாத் உட்பட தொழில் முனைவோர் வங்கி மேலாளர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Manjunath

இந்த கூட்டத்திற்கு வந்திருந்த முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மத்திய அரசின் லட்சினையை சட்ட விரோதமாக பயன்படுத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பெயரில் இருவரிடமும் பலமணி நேரம் சூரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனிடையே, முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் மீது சேலம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அதில், எம்எஸ்எம்இ அமைப்பில் தனக்கு பொறுப்பு வழங்குவதாகக் கூறி ரூபாய் 50 லட்சம் பெற்றதாகவும் ஆனால் பொறுப்பு ஏதும் வழங்காமல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஆறு பிரிவுகளின் கீழ் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்த சூரமங்கலம் போலீசார், அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து எம்எஸ்எம்இ மோசடி தொடர்பாக விரிவான விசாரணையை சேலம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு மாநில துணைத்தலைவர் மஞ்சுநாத் ஆகியோரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சேலம் மாநகர போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

muthuraman

மோசடி தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட போதிலும் இந்த அமைப்பு குறித்த விவரங்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் குறித்து பட்டியல் தயார் செய்வதற்காக இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாநகர குற்றப்பிரிவுக்கு மாற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.