சைக்கிளில் சென்ற பள்ளி மாணவரிடம், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெல்மெட் கேட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை நெறிப்படுத்துவதில், காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பாய்ந்து பிடித்த காவலர்கள், அவர்களின் வாகன ஆவணங்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பள்ளி மாணவர் ஒருவர் அந்த சாலை வழியாக சைக்கிளில் சென்று சென்று கொண்டிருந்தார். சினிமா ஹீரோ போல் சாலையின் குறுக்கே பாய்ந்த உதவி ஆய்வாளர், மாணவரின் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். பைக்குகளின் சாவியைப் பிடுங்குவதைப் போல், சிறுவன் வைத்திருந்த இலவச சைக்கிளுக்கு பூட்டுபோட்ட அவர், அதை அப்படியே தூக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டார். தன்னை ஏன் காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள் என்பது தெரியாமல், திகைத்து நின்றார் அந்த சிறுவன்.
அவரிடம் ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக காவல்துறையினர் அபராதம் செலுத்தச் சொன்னதாக கூறப்படுகிறது. என்ன செய்வது என தெரியாமல் குழம்பிப்போன மாணவர், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், 1 மணி நேரமாக காக்க வைத்த காவலர்கள், ஒரு வழியாக சைக்கிளையும், பள்ளி மாணவரையும் விடுவித்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், சிறுவன் இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்களில் ஓட்டியதால், அவரை எச்சரிக்கும் வகையில் பிடித்து வைத்திருந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.