விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் போலீஸ் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை அருகே அத்தி குளத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தனது மகள் காணமல் போனது தொடர்பாக ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக அவரது மனைவியிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மார்கண்டேயனின் மனைவி பூமயில் மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார். அதில், காவல்துறையினர் என் கணவரை துன்புறுத்தியதால் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் துன்புறுத்தியதாலேயே மார்கண்டேயன் தற்கொலை செய்து கொண்டார் என உள்துறை செயலாளர் சார்பில் துணை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். சம்பந்தபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை என தமிழக அரசு அதில் கோரியுள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.