சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பெண் காவலர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு உத்தரவுகளையும் நீதிமன்றம் பிறப்பித்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் சிறிதளவும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளனர் எனவும் அறிவுறுத்தியது.
அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி ஜெயராஜ், வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்தது. மேலும் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷை கைது செய்தது. பின்னர், தலைமறைவாக இருந்த உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை கைது செய்தது. மேலும், நள்ளிரவில் சேசிங் செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர்களை போலீசார் லத்தியால் தாக்கியதாக சாத்தான்குளம் தலைமை பெண் காவலர் மாஜிஸ்திரேட்டிடம் சாட்சி அளித்தார். இதனால் அவருக்கு பாதுகாப்பு மறுக்கப்படுவதாக காவலரின் கணவர் தகவல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் தொடங்கிய உயர்நீதிமன்ற கிளை தலைமை காவலர் ரேவதிக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்து ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்தது. மேலும் பெண் காவலரின் அச்சத்தை போக்கும் வகையில் அவருடன் தொலைபேசியில் நீதிபதிகள் பேசினர்.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பெண் காவலர் வீட்டிற்கு நான்கு காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளார்கள் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார். மேலும், “இரண்டு பெண் காவலர்கள் சம்பந்தப்பட்ட பெண் காவலருக்கும், இரண்டு ஆண் காவலர்கள் அவரது கணவருக்கும் பாதுகாப்பாக இருப்பார்கள். இந்த பாதுகாப்பு 24 மணி நேரமும் இருக்கும்” எனக் குறிப்பிட்டார்.