திருச்சி லால்குடி அருகே தங்கையை காதல் திருமணம் செய்த முன்பகையால் நிகழ்ந்த கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார். தப்பிச்சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியை சேர்ந்த செல்வராஜ் புனிதா தம்பதியின் மகன் கிருபன்ராஜ் (27). இவருக்கு கிரிஜா உட்பட இரு தங்கைகள் உள்ளனர். இந்நிலையில், கிருபன்ராஜ் காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ராபின்சாமேரி என்ற மனைவியும் ரிஜோஸ் இனியா என்ற 6 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு கிருபன்ராஜ் தங்கை கிரிஜாவுக்கு பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கிரிஜா அதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதனால் கவியரசனுக்கும் கிருபன்ராஜுக்கும் இடையே பகை ஏற்பட்டது. தொடர்ந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த கிருபன்ராஜ், ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை இடைமறித்த கவியரசன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் கவியரசன் மறைத்து வைத்திருநத கத்தியால் கிருபன்ராஜ் தொடையில் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த கிருபன்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மருத்துவர்கள் முதலுதவி செய்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கவியரசன், மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி கலைவாணன் மற்றும் நிவாஸ் ஆகிய மூவரையும் லால்குடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.