தமிழ்நாடு

கிணற்றில் மிதந்த பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையின் சடலம் - தாய் சொன்ன அதிர்ச்சி தகவல்

webteam

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே கட்டார்குளத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்டது. குழந்தையை பெற்ற தாயே கொலை செய்தாரா என்ற சந்தேகத்தின் பேரில் களக்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். ஆட்டோ டிரைவரான இவரது மனைவியின் பெயர் இசக்கியம்மாள் (வயது 28). கொஞ்சம் மனநலம் சரியில்லாமல் இருந்து வந்த இசக்கியம்மாளுக்கு கடந்த 13ஆம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ரமேஷ் பயணியை ஏற்றிக்கொண்டு ஆட்டோ சவாரியாக சேரன்மாதேவி சென்றுள்ளார். சவாரி சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதைக் கண்டு திகைத்துள்ளார்.

இதுகுறித்து இசக்கியம்மாளிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லாமல் அருகில் இருந்த கிணற்றை காண்பித்துள்ளார். கிணற்றை பார்த்தபோது குழந்தை ஒன்று மிதப்பது தெரியவந்தது. இதுகுறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்ட இசக்கியம்மாள் குழந்தையை கிணற்றில் போட்டு கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவ அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.