தமிழ்நாடு

மாணவனின் பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்ட சக மாணவர்கள் - சென்னையில் அதிர்ச்சி!

webteam

கே.கே நகரில் இயங்கி வரும் மத்திய அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், கே.கே நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாண்டிச்சேரியில் படித்து வந்த சிறுவன் கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு குடிப்பெயர்ந்து இந்த பள்ளியில் சேர்ந்து படித்து வந்தாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் சிறுவனின் மொழி மற்றும் பாவனையை 10க்கும் மேற்பட்ட சக மாணவர்கள் கிண்டல் செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், சிறுவனுக்கும் சக மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சிறுவனை சக மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து சிறுவன் அளித்த தகவலின் பேரில் சிறுவனின் தந்தை ஆசிரியர்களிடம் புகார் செய்ததால், சக மாணவர்களை ஆசிரியர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் ஆசிரியர்களிடம் புகார் செய்ததால் ஆத்திரமடைந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 21ஆம் தேதி பள்ளி முடிந்ததும், சிறுவன் வெளியே வந்தபிறகு அவனை தாக்கி அரை நிர்வாணமாக்கி உள்ளனர். பின்னர் அவனது பிறப்புறுப்பில் தாக்கி கொடூர செயலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தொந்தரவில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.