ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலையில் இன்னும் உண்மைகள் வெளிப்படாத நிலையில், ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் தினேஷ் சவுத்ரியை காவலில் எடுப்பதில் சென்னை போலீஸ் காலதாமதம் செய்துவருகிறது. தினேஷ் சவுத்ரியின் நீதிமன்ற காவல் முடிய இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், இந்த வழக்கில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக கேள்விகள் எழுந்துள்ளன
சென்னை கொளத்தூரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த கொள்ளை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க கடந்த 8-ம் தேதி சென்னையிலிருந்து தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் மூன்று போலீஸாரைக் கொண்ட தனிப்படையினர், கடந்த 13-ம் தேதி கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றபோது, காவல்ஆய்வாளர் பெரியபாண்டியன், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிர் இழந்தார்.
இந்த வழக்கில் பெரியபாண்டியனின் உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டு, முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்ததாக ராஜஸ்தான் மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர். பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆய்வாளர் முனிசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில ஜெய்த்ரன் போலீஸார், நாதுராம், அவரது மனைவி மஞ்சு மற்றும் போலீஸாரைத் தாக்கிய நாதுராமின் உறவினர்கள், கூட்டாளிகளைத் தேடி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு நாதுராமின் மனைவி மஞ்சுவை போலீஸார் கைதுசெய்தனர். அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையில், நாதுராம் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்துவிட்டு தனது மனைவி மஞ்சுவுக்கு செல்போனில் தகவல் கொடுப்பார் எனவும், பின்னர் விமானம் மூலம் அந்த இடத்திற்கு சென்று கொள்ளையடித்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்துவிடுவதாகவும், நாதுராமின் கூட்டாளிகள் பின்னர் அவற்றை பெற்றுக்கொண்டு பணமாக்கிவிடுவர் என மஞ்சு விசாரணையில் தெரிவித்ததாக ராஜஸ்தான் போலீசார் கூறினர்.
இந்நிலையில் கொள்ளை வழக்கில் மற்றொரு கொள்ளையனான தினேஷ் சவுத்ரியை கடந்த 14-ம் தேதி ஜோத்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தினேஷ் சவுத்ரியை இதுவரை சென்னை போலீசார் காவலில் எடுக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வாரத்தை கடந்துவிட்ட நிலையில் இதுவரை கொளத்தூர் கொள்ளை வழக்கில் காவலில் எடுக்கப்படவில்லை.
சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் அடுத்த வாரம் ராஜஸ்தான் சென்று காவலில் எடுத்துவரப் போவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினேஷ் சவுத்ரியின் நீதிமன்ற காவல் இன்னும் 5 நாட்களில் முடிந்துவிடும் என்றும், அதற்குள் சென்னை போலீசார் காவலில் எடுக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.