தாம்பரம் அருகே மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அவரது நண்பரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய விஜய், செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் 6-ம் தேதி சரணடைந்தார்.வரும் 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் விஜய்யை மூன்று நாட்கள் காவலில் தாழம்பூர் போலீசார் எடுத்தனர்.
துப்பாக்கி எப்படி கிடைத்து? எதற்காக முகேஷை சுட்டாய்? துப்பாக்கி எங்கிருக்கிறது? உள்ளிட்ட கேள்விகளை விஜய்யிடம் போலீசார் கேட்டதாக தெரிகிறது. இதற்கு கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூரைச் சேர்ந்த ரவுடியிடம் துப்பாக்கி வாங்கியதாகவும், தன் வேலை செய்யும் ரவுடியிடம் முகேஷை சேர வற்புறுத்தியதாகவும் அதற்கு அவன் மறுத்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்து சுட்டு விட்டதாகவும் விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது.
மேலும் நல்லம்பாக்கம் அருகே உள்ள கல் குவாரியில் துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பதாகவும் விஜய் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து
தாழம்பூர் போலீசார் அந்த கல் குவாரிக்கு சென்று பிஸ்டல் வகையைச் சேர்ந்த விஜய் பயன்படுத்திய துப்பாக்கியை மீட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கொலை வழக்கில் துப்பாக்கி முக்கிய ஆதாரம் என்பதனால் வழக்கு அடுத்தகட்டத்திற்கு சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்
.