தமிழ்நாடு

ஆடி அமாவாசையொட்டி கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் - சென்னை காவல்துறை அறிவுறுத்தல்

JustinDurai
ஆடி அமாவாசை என்பதால் கோயிலுக்கு செல்வதற்காகவோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவோ சென்னை கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது சில தளவுர்களுடனும், கூடுதல் கட்டுப்பாடுகளுடனும் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில், அதிகளவு மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை விர்க்கும் வகையில், வரும் 23-ஆம் தேதி வரையிலுள்ள வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று ஆடி அமாவாசை என்பதால் கோயிலுக்கு செல்வதற்காகவோ, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவோ, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு முதல் திருவான்மியூர், எலியட், மெரினா, அண்ணா சதுக்கம், திருவொற்றியூர், எண்ணூர் வரையிலான கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் ஆடி அமாவாசையொட்டி கோயில்களில் தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.