தமிழ்நாடு

போராட்டத்தில் வன்முறை: பாமகவினர் 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

webteam

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி சென்னையில் நடந்த போராட்டம் தொடர்பாக அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமகவினர் 3,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னை தாம்பரம், பம்மல் உள்ளிட்ட இடங்களில் பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், ரயில்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதோடு தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகளை வைத்து அடைத்தனர் என்ற புகாரும் எழுந்தது.

இந்நிலையில், ரயில் மீது கல்வீசி தாக்கியதாக 300 பேர் மீதும், ரயில் பாதையை அடைத்ததாக 50 பேர் மீதும், ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னையில் நடந்த போராட்டம் தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  ஜி.கே மணி உள்ளிட்ட 3000 பாமகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை நகர், புறநகரில் உள்ள காவல் நிலையங்களில் பாமகவினர் மீது 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.